Thursday, May 19, 2011

அப்பல்லோவில் காத்திருத்தல்

இன்று(18/5/2011) நிலாக்குட்டியின் செக்கப்பிற்க்காக அப்பல்லோ ஹாஸ்பிட்டல் போயிருந்தோம். எந்த மால்களுக்கும் குறைவில்லாமல் ஹாஸ்பிட்டல்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. நவ நாகரிக மங்கையர்களும், ஆண்களும்,பெண்களும் சின்னக்குழந்தைகளும் எப்போது குறுக்கும் நெடுக்குமாக நடமாடிக்கொண்டே இருக்கிறார்கள். அவ்வப்போது கண்ணில் படும் கட்டுப்போட்ட பேஷண்ட்களும், ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், சக்கர நாற்காலிகளுமே இது ஒரு வித்தியாசமான சூழல் என்று நினைவுபடுத்துகின்றன.  இல்லாவிடில் யார் யார் என்ன எப்படி இருக்கிறார்கள். எவ்வளவு விதமான முகங்கள் இருக்கின்றன. இந்த ஹேர்ஸ்டைல், புடவை, சுடிதார் எல்லாம் நன்றாக இருக்கிறதே என்று நோட்டம் விடுவதிலேயே கொஞ்சம் பொழுது போய்விடுகிறது. என் பக்கத்தில் உட்கார்ந்து காத்துக்கொண்டிருந்த அம்மா கிடைத்த அவகாசத்தில் மிகுந்த கவனமாக ஷீரடி சாய்பாபா சரித்திரத்தைப் படித்துக்கொண்டு இருந்தார். நான் இதை பேப்பரில் எழுதிக்கொண்டு இருந்தபோது நிலாக்குட்டியும் அவள் சித்தப்பாவும்(ஆனந்த்) மும்முரமாக "கலர்"(?) பாக்கற விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

நிலாக்குட்டி இங்கு வரும் போது தண்ணீர் பாட்டிலில் இருந்து நாதஸ்வரம் வாசிப்பது போல தண்ணீர் குடிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தாள்.  ஆனந்த், "நிலாகுட்டீ நாதஸ்வரம் எப்டி வாசிக்கறது" என்று கேட்டதற்கு, சிறிதும் யோசிக்காமல் "எச்ச பண்ணி வாசிக்கணும்" என்று நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு ஒரு பதில் சொன்னாள்.

வந்தவுடனே டாக்டரின் ரிஷப்சனிஸ்டிடம் சொல்லிவிட்டு அங்கிருந்த CoffeeDay ல் காபி குடித்துவிட்டு வந்தோம். அங்கு ஓரிரு ஐட்டங்களைத் தவிர எல்லாமே சிவப்புப்பொட்டு வைத்துக்கொண்டு மங்களகரமாக இருந்தன, நிலாக்குட்டிக்கு போனமுறை வாங்கிக்கொடுத்த ஓட்ஸ்-ஹனி குக்கி அநியாயவிலை பிஸ்கட் (1 ரூ 10) கூட இல்லை. அங்கு ஒருவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த இட்டலி சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.  நல்ல வேளை அங்கு யாரும் அவரிடம் இங்கே உட்காரக்கூடாது என்று சொல்லவில்லை.

திரும்பி வந்து உட்கார்ந்து கொண்டு காத்துக்கொண்டிருந்தபோது சிவப்பு கவுன் அணிந்து கொண்டு ஒரு சின்னக்குழந்தை துரு துருவென்று விளையாடிகொண்டிருந்தது.  அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து அதே குழந்தை எதற்கோ வீறிட்டு அழுதபோது அதன் அப்பா தூக்கிக்கொண்டு வெளியே போனார்.

நான் எழுதிகொண்டிருப்பதை பார்த்துவிட்டு நிலாக்குட்டியும், என்னிடம் ஒரு பேப்பர் பேனா வாங்கி வசதியாக உட்கார்ந்து கொண்டு, "நாம்ப இப்போ Dr. ஷா-வை பார்க்கணும்" என்று அவளுடைய பிரத்யேகமான கையெழுத்தில் எழுதிக் காண்பித்தாள்.  அப்புறம் நிலாக்குட்டியும் சித்தப்பாவும் யானை விளையாட்டு விளையாடினார்கள். அவள் எழுதிவைத்திருந்த சீட்டை யானையிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டாள். யானையும் ஆசீர்வாதம் செய்து அதே சீட்டைத் திருப்பிக்கொடுத்தது. சிலதடவைகள் இது ஆனவுடன் யானையும் அவளும் அடுத்த வராண்டா வரைக்கும் வாக்கிங் சென்றுவிட்டு திரும்பி வரும்போது தரையிலுள்ள கட்டங்களில் கோட்டை மிதிக்காமல் வந்து சேர்ந்தனர்.

எங்களுக்கு முன்னால் செல்ல வேண்டியவர்கள் டாக்டரிடம் சென்றவுடன் இவளும் உடனே போகவேண்டுமென்று நச்சரிக்க ஆரம்பித்தாள். நான் இன்னும் ஒரு பத்து நிமிஷத்தில் உள்ளே போகலாம் என்று சொன்னவுடனே "பத்து நிமிஷம் ரொம்ப நேரமா?" என்று கேட்டாள். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

யானை "யாசீர்வாதம்" செய்ய என்னாவது கொடுக்க வேண்டுமென்று சொல்லி பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டில், என்னுடைய கைப்பை எல்லாவற்றையும் கொடுத்தாகிவிட்டது. யானையும் அவளை "யாசீர்வாதம்" செய்து எல்லாவற்றையும் திருப்பிக்கொடுத்துவிட்டு, சளியாக இருக்கிறது, தும்மல்போடுகிறேன் என்று சொல்லிவிட்டு தாளம் போட்டுக்கொண்டு இருந்தது. :). அவளும் "தகிட தகிட" என்று பின் தாளம் போட்டாள்"

நாங்கள் டாக்டரின் ரூமுக்குச் செல்ல எழுந்தபோது, எங்களுக்கு முன்னால் ஒரு அம்மா, கிடைத்த சந்தில் சிந்து பாடி (மாமியின் உவமை :) ) உள்ளே நுழைந்து விட்டபோது, காத்திருக்க முடியாமல் யானையும் நிலாக்குட்டியும், (Shrek)ஷ்ரெக்காகவும், கழுதையாகவும்(நிலா) வேறு அவதாரம் எடுத்துக் கொண்டு விட்டதும் அல்லாமல், கையை மடக்கி போனாக வைத்துக் கொண்டு மும்முரமாக பேச ஆரம்பித்துவிட்டன. போதாக்குறைக்கு கழுதை அதன் அம்மாவிற்கு கூட( வேற யாரு...நாந்தேன் :(  )  ஒரு போன் போட்டது.

ஒருவழியாக 2 மணி நேரக்காத்திருப்புக்கு பின் டாக்டரின் ரூமிற்குள் நுழைந்தோம்.

பின்குறிப்பு:

இது ஒரு நகைச்சுவைப் பதிவாகத் தோன்றினாலும் மருத்துவரிடம் சென்றது ஒரு சீரியஸான நிகழ்வு குறித்து. அந்த காத்திருப்பில் எற்படக்கூடிய கவலை தரக்கூடிய ஆலோசனைகளை சற்றே ஒதுக்கி, ஒரு சிறுமியின் செயல்கள் அவளை ஆர்வத்துடன் கவனிக்க வைத்து அதைப் பதிவு செய்யவும் தூண்டின.

Monday, May 16, 2011

நரசிம்ம ஜெயந்தி

போன நரசிம்ம ஜெயந்திக்கு ஒரு பதிவு போட்டபிறகு பிளாக் பக்கமே வரமுடியவில்லை. ஒரு வருடம் வேகமாக ஓடி விட்டது. இந்த வருடமும் மட்டபல்லி சினேகிதர்களோடு சென்று வரலாம் என்று பிளான் போட்டு கடைசியில் கண்ணனை ஆஸ்பத்திரியில் சேர்த்து அங்கு இருக்க வேண்டியதாய்ப் போயிற்று. கண்ணன் போன வருடம் புதுச்சட்டை எல்லாம் போட்டு அட்டகாசமாக கொண்டாடினான். இன்று ஒன்னும்  ஸ்பெ ஷல் இல்லை. குளித்துவிட்டு சாப்பிட்டதே இன்று பெரிதான விஷயமாகி விட்டது. நரசிம்மரை ஒரு நிமிஷம் கண்மூடி தியானித்துவிட்டு வேறு வேலை பார்க்கப்போய்விட்டேன்.

Sunday, May 15, 2011

Sach Brand

மாரட்பல்லி food bazaar-ல்  Sach Brand ஐட்டங்கள் ஏகப்பட்டது கொட்டி வைத்திருக்கிறார்கள். பேஸ்ட், பிரஷ் இத்தியாதிகள். அறிமுகச்சலுகை விலை என்பதால் நானும் ரெண்டு மூணு பொருள்கள் வாங்கி வைத்திருக்கிறேன். பிரஷ் ஒன்னும் சரிப்பட்டு வரவில்லை. கல்லு மாதிரி இருக்கிறது. முதல் நாள்  தேய்த்துவிட்டு நொந்து போய்விட்டேன்.  ஒருவேளை காலியாகப்போகும் ரீபில் பேனா கடைசியில் நம் கையில் பழகியிருப்பதைப் போல கடைசியில் தான் அட்டகாசமாக இருக்குமா?. அப்படி இருந்தால் நினைப்பாக சீப்புத் தேய்க்க எடுத்து வைத்துவிட வேண்டும்.

Mixed Fruit Juice எனக்கும் நிலாக்குட்டிக்கும் பிடித்திருந்தது. நிலா குட்டி அதனுடன் இலவச இணைப்பாக வந்த பெட் பாட்டிலுடன் ஒரு நாள் முழுக்கச் சுற்றினாள். அப்புறம் பாட்டில் மூடி இரண்டும் நிலாக்குட்டியிடம் சண்டை போட்டுக் கொண்டு எங்கேயொ போய்விட்டன தனித்தனியாக. என்று வீட்டில் எல்லாம் ஜோடியாக இருந்தன இப்போது இருப்பதற்கு? :). இன்று பேஸ்ட்க்கு திறப்பு விழா. சுமாராக இருந்தது. ஏன் நாம் எப்போதும் புது brand முன்புள்ளவற்றிலிருந்து முற்றும் விலகி இருக்க வேண்டுமென்று முதலில் எதிர் பார்க்கிறோம்?. ஒருவேளை  சச்சினே விளம்பரத்தில் இந்த பிரஷ் எடுத்து, இதே பேஸ்ட்டைப் போட்டு பல் தேய்த்து விட்டு, இந்த ஜுஸ் குடித்து விட்டு சென்றதனால் தான் என்னால் உலகக்கோப்பையில் சிறப்பாக ஆட முடிந்தது என்று சொன்னால், அடுத்த உலகக்கோப்பை வரைக்கும் இந்த brand தாக்குப்ப்பிடிக்கலாம்.