Sunday, September 30, 2012

கோடுகள்

சில கோடுகள் எங்கிருந்தோ வந்தன

இரண்டு ஒன்றை ஒன்று பார்த்தன

வெட்டிச் சென்றன முற்றுப் புள்ளி தேடி

காலம் போய்க்கொண்டு இருக்கிறது

ஒரு கோட்டுக்குப் பின்னால் சில புள்ளிகள்

Tuesday, September 25, 2012

மொட்டை மாடி! மொட்டை மாடி !!

பின் வீட்டு மொட்டை மாடியில் ஐந்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் ரொம்ப மும்மரமாகக் கையில் கார் ஓட்டிக்கொண்டு இருந்தான். 4 பெண்கள். அவர்களில் இருவர் எதோ ஒரு புடவைத்துணியை வைத்துக்கொண்டு அவர்களின் உலகில் நடை பயின்றுகொண்டிருந்தனர். ஒரு துண்டுத்துணியைப் போர்த்திக் கொண்டவுடன் அம்மாவாகி விட பெண் குழந்தைகளால் மட்டுமே இயலும். அந்த துப்பட்டா போர்த்திகொண்ட அழகிய சிறு பெண்ணின் அழகினையும் நளினத்தையும் நான் எங்கும் கண்டதில்லை. ஒரு பூந்தோட்டத்தில் ஒரு பூ மட்டும் அங்கும் இங்கும் திரிவது போல அவள் தன் சிறு தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். இறைவனை விட அவரது பெயர் தான் பக்தர்களுக்கு பிரியமானது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இங்கு அம்மாவை விட அம்மாவின் புடைவைத்துணிகள் குழந்தைகளுக்கு உறவாகின்றன. பெரியம்மாவுக்கும் மிகப்பிரியமுள்ள நிலாக்குட்டி , ஒரே ஒருமுறை பெரியம்மா லேசாகக் கடிந்து கொண்டதும், பெரியம்மாவின் ஒரு புடவையைத் தேடி எடுத்து வெகு நேரம் அதைக் கட்டிக் கொண்டு அழுதுவிட்டுத் தான் உறங்கினாள். மற்ற இரு குழந்தைகளும் கூட ஓடித் தாங்களும் ஒரு துணியை தலையில் மணப்பெண் போல முக்காடு போட்டுக் கொண்டு ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தனர். எனக்கு நான் துண்டில் தொட்டில் கட்டி கல் குழந்தை போட்டு விளையாடியதும், என் அக்காவின் பிரபல விளையாட்டு வாசகங்களான "மாமி எனக்கு 8 குழந்தைகள்" எங்காத்துக்காரர் வேலைக்குப் போய்ட்டார். குழந்தைகள் ரொம்பப் படுத்தறா" என்று சின்ன அக்கா  ஒரு துண்டை மேலாக்காக போட்டுக்கொண்டு விளையாடுவாள் என்று அப்பா சொன்னதும் நினைவுக்கு வந்தன. சிறிது நேரத்தில் அந்த இடம் வெறும் மொட்டை மாடியானது. ( எழுதியது :ஜூன் 16-2012 )

Tuesday, September 11, 2012

சில பேரீச்சம்பழங்களும் நாட்களும்

நிலா சற்று நேரத்துக்கு முன் பிரிட்ஜிலிருந்து பேரீச்சம்பழங்களை எடுத்துச் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

நிலா   : அம்மா!!.. .இது பேர் என்னம்மா??
நான்   : பேரீச்சம் பழம்.

நிலா   : இங்கிலீஷ்-ல?
நான்   : டேட்ஸ் (dates)

நிலா   : டேட்ஸ்ஆ? ...... [ஒரு நிமிடத்துக்குப்பின்]

நிலா   :  அம்மா...இதுக்கு பேர் எதுக்கு டேட்ஸ்ன்னு வைச்சுருக்கா தெரியுமா?
நான்   : நீயே சொல்லு குட்டி...

நிலா   : இந்த டேட்ஸ் சாப்ப்டா dates எல்லாம் சரியா சொல்லலாம். அதான். இன்னிக்கு
            date என்ன?

நான்  :  .............. ????


குழந்ததைகள் என்னமா யோசிக்கிறார்கள்... :)

பிறந்தநாள் பரிசு.

இந்த பிறந்த நாள் என்று ஒன்று வருகிறது என்றாலே எல்லாருக்கும் ஒரு மகிழ்ச்சி வந்து விடுகிறது. அதுவும் சின்னக் குழந்தைகள் அதைக் கொண்டாட்டத்துடன் எதிர்பார்ப்பார்கள் தானே. வழக்கமான பரிசுகளுக்கு மத்தியில் தற்போது "ரிடர்ன் கிப்ட்' என்ற பெயரில் எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி டப்பா, பென்சில் பாக்ஸ் இன்னும் சில பல பொருட்களைக் கொடுக்கும் பழக்கம் பிரபலமாகிக் கொண்டு வருகிறது. நிலாவும் தற்போது பள்ளி விட்டு வரும் போது பார்பி பென்சில் டப்பா, உண்டியல், மெழுகுக்கலர் பென்சில்கள், ஸ்கெட்ச் போன்றவற்றை மற்ற குழந்தைகளின் பிறந்த நாளுக்காக எல்லாக் குழந்தைகளுக்காகவும் கொடுத்தார்கள் எனப் பலவற்றைக் கொண்டு வருகிறாள். இவை யாவுமே மலிவு விலைத்தயாரிப்புகள். பெரும்பாலும் சீனா விலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இந்த மாதிரியான பிளாஸ்டிக் பொருள்கள் பெரும்பாலும் தரமற்றவையாகவே இருக்கின்றன. இவை மீது ஒட்டப்பட்டுள்ள கார்ட்டூன் வடிவங்களுக்காகவே குழந்தைகளிடம் பிரபலம் ஆகின்றன அன்றி இவ்வாறான ஒரு பென்சில் எழுதுவதற்கு தரமில்லாததாகவே இருக்கிறது.மற்றும் இவை ஒரே மாதிரியாக இருப்பதினால் குழந்தைகளுக்கிடையே சண்டை ஏற்பட வழிவகுக்கிறது. பலசமயங்களில் பென்சில், மெழுகு கலர் பென்சில், ரப்பர் இவைகள் தேவைக்கு அதிகமாக வந்து விடுவதால், அவற்றை பத்திரமாக வைப்பது போய் சமயத்தில் வீடு முழுக்க இறைத்து வீணடிக்கிறார்கள். சிலர் ஆசைப்பட்டு குடுக்க ஆரம்பித்த விஷயம் இப்போது மற்ற குழந்தைகளின் பிறந்த நாளுக்கு செய்வது போன்று தன் குழந்தையின் பிறந்த நாளுக்கும் குடுத்து அனுப்பவேண்டுமென்ற எண்ணத்தைக் கிளறி விடுகிறது.  பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை கூடிய வரை தவிர்க்க வேண்டும் என்று அடுத்த தலைமுறைக்கு உணர்த்துவதற்கு பதிலாக நாம் மறுபடியும் "தினம் தினம் ஒரு தினம்" என்ற விளம்பர மோகத்தில் மிக நுட்பமாக நமது ஆடம்பர செலவுகளை அத்தியாவசியமான ஒன்றாக மாற்றி காட்டக்கூடிய , வெளியே குவித்து வைக்கப்பட்டுள்ள சந்தைப் பொருட்களின் மாய வலையில் மாட்டிக் கொள்கிறோம்.

 அவரவர் சக்திக்குட்பட்ட வகையில் குழந்தைகளுக்கு சிறிய பரிசுப் பொருட்களைத் தர வேண்டுமென நாம் பிரியப்பட்டால், நிஜமாகவே அவர்களுக்கு நன்மை பயக்கக் கூடிய பொருள்களைத் தரலாம்.

நிலாவின் பிறந்த நாள் செப்டெம்பர் 28 தேதி வருகிறது. எனக்கு ஒரு மாதத்திற்கு மேலாகவே அவளுடைய பிறந்த நாளுக்கு என்ன கொடுப்பது என்று யோசித்து யோசித்து குழம்பிப்போன வேளையிலே வந்த எண்ணங்கள் இவை.

Monday, September 10, 2012

கண்ணனும் மம்முவும்

பெரியம்மா   :  (சமயலறையிலிருந்து)  கண்ணா பசிக்கறதா? என்ன மம்மு
                              டா வேணும்?

கண்ணன்      :  (மெதுவான குரலில்) ரசம் மம்மு.

பெரியம்மா   :  (சமயலறையிலிருந்து வெளியே வந்து) நீ சொன்னது 
                              கேக்கலை. என்னடா குட்டி வேணும்??

கண்ணன்     : (சத்தமான குரலில் ) கோளி மம்மு.

பெரியம்மா, பெரியப்பா, பாட்டி :   என்ன்ன்ன்ன????????????
(யாருடா சொல்லிக்குடுத்தா???? பூர்ணா உன் புள்ள என்ன சொல்றான்னு கேளு.... .கோளி மம்மாமே???

பூர்ணா          : அவ்வ்....எங்கடா புடிச்சே இதெல்லாம்???. யாரு சொல்லிக்
                           குடுத்தா........  :-(.  :-(.