Wednesday, May 26, 2010

ஆளரிநாதன் - அழகிய சிங்கன்

தீர்க்க முடியாத கஷ்டத்தில் ஒருவர் மாட்டிக்கொண்டு அல்லல் படும்போது, நல்மனம் படைத்த நண்பர் வந்து தக்க நேரத்தில் உதவினால், அவர் நல்ல சமயத்தில் வந்து கை கொடுத்து காப்பாற்றினார் என்று சொல்கிறோம். அது போன்று மனம் சோர்ந்து உற்சாகமிழக்கும் சமயங்களில், நம்மை கை தூக்கி கரையேற்றுபர் அழகிய சிங்கர். அப்பா என்னை கை தூக்கி விடு என்று நொடிப்பொழுதில் நினைத்தாலும், உள்ளேன் என்று உடனடியாக உணர்த்துபவர்

என் அப்பா சொல்லிக்கொடுத்த இந்த ஸ்தோத்திரத்தை என்று சொன்னாலும், மனதில் தைரியம் பிறக்கிறது.

ஏகேன சக்ரமபரேண கரேண ஸங்க-
மன்யேன ஸிந்து-தனயாமவலம்ப்ய திஷ்டன்
வாமேதரேண வரதாபய-பத்ம-சிஹ்னம்
லக்ஷ்மீ-ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

ஒரு கையில் சுதர்சன சக்கரத்தையும், மறு கையில் சங்கையும், அருகில் தாயாரை அணைத்துக் கொண்டும், என்னாளும் அபயம் அளித்து வரமருளும் தாமரையை ஒத்த கையையும் உடைய லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள் எனக்கு கை கொடுத்து அருள வேண்டும்.
திரு முக்கூர் லக்ஷ்மி நரசிம்ஹாசாரியார் எழுதிய "குறை ஒன்றுமில்லை"-ல் எங்கும் நரசிம்ம பிரவாகம். பிரபாவமே. மட்டபல்லி நாதனை தரிசிப்பது என்னாளோ?

மாதவிப்பந்தலில் உள்ளஅட்டகாசமான பதிவு

http://madhavipanthal.blogspot.com/2009/05/blog-post.html

Monday, May 24, 2010

பை தொலைந்து விட்டது

நேற்று நிலாக்குட்டி அவள் அப்பாவுடன் ஸ்கூட்டர்ல போகும் போது, அவளோட கைப்பை தொலைந்து போய் விட்டது. ரோட்டில் கை தவறி கீழே விழுந்ததைத் திரும்பி வந்து எடுப்பதற்கு முன் யாரோ தூக்கிக்கொண்டு போய் விட்டார்கள். அவள் பை திரும்ப வேண்டுமென்று கொஞ்சம் அழுதாளாம்.அதில் நான் அவளுக்கென்று ஆசையாய் வாங்கின மூணு அடுக்கு மாலையும், நிலாவோட பாட்டி ஆசையாய் அவளுக்காகவென்று மோண்டா மார்க்கெட்டில் வாங்கின வளையலும் இன்னும் அவளின் சேமிப்பு 15 ரூபாயும் இருந்தது. எடுத்துக்கொண்டு போனவர்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவங்களுக்காவது ஆகட்டும். எனக்கு அந்த பையை ரொம்ப பிடிக்கும். அதை எடுக்கும் போதெல்லாம் மெத்தென்று ஒரு பூனைக்குட்டியைப் போல இருக்கும். இனிமேல் நிலாவின் பொருள்கள் உள்ள பையில் "இது ஒரு குட்டிக் குழந்தையின் பை" என விலாசத்துடன் சீட்டு எழுதி வைக்கலாம் என்று இருக்கிறேன். ஒருவேளை பையை எடுப்பவர்களுக்கு அது ஒரு குட்டி குழந்தையின் பொக்கிஷம் என்று உணர்த்துவதற்கு. அவர்களும் சிலசமயம் பையை திருப்பிக்கொடுத்து பாப்பாவின் முகத்தில் சிரிப்பை வரவழைக்கப் பிரியப்படலாம்.

(?)

சப் சப் சத்தம்
எரியும் விளக்கு
ஆடும் தொட்டில்

Monday, May 17, 2010

படித்த பாடமும் கற்ற அனுபவங்களும்…

ஏனோ தெரிவதில்லை சில நியாபகங்கள் மனதில் படிந்து விடுகின்றன.அவற்றை நம் வாழ்நாள் முழுவதும் மறப்பதற்கில்லை. நினைவிலும் கனவிலும் அதன் இழைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. பத்தாம் வகுப்பில் பாடமாக இருந்த ஒன்று வாழ்க்கையில் நிழல் போல வருவதைக் கண்டால் ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு தெரிந்த சில ஆங்கில எழுத்தாளர்களும் பள்ளியில் அறிமுகமானவர்களே. பத்தாம் வகுப்பில் ஒரு பாடம் “My Lost Dollor- By Stephen Leacock”. இதில் ஆசிரியர் அவரது நண்பர் ஒருவருக்கு ஊருக்கு செல்லும் சமயம் தற்செயலாக ஒரு டாலர் நோட்டை தந்துதவுகிறார்.அதன் பின் நிகழும் நிகழ்வுகளே இந்தக் கட்டுரை. சிறிய பணமாய் இருப்பினும் அதைப்பெறுவதற்கு அவர் செய்யும் முயற்சிகள் என்ன..என்ன…. குடுத்த பணத்தை திரும்ப கேட்பதற்கு எத்தனை தயக்கப்பட வேண்டியிருக்கிறது. குடுத்ததைக் சொன்னால்/கேட்டால் அடுத்தது பகை என்ற சொல்லே நினைவுக்கு வருகிறது. சிறிய கதை அந்த வயதில் பெரிய மாற்றத்தை ஏதும் உண்டு பண்ணவில்லை.ஆனாலும் மனது எங்கோ மூலையில் போட்டு வைத்திருக்கிறது.
படிப்பு முடித்து கையில் காசு புரளும் இந்த சமயம் நண்பர்களுடன் வெளியே செல்வது என்றானபிறகு…இந்த கதை நினைவுக்கு வருகிறது…நெருங்கிய நண்பர்/நண்பியுடன் செலவுகளைப் பகிர்ந்து கொள்வது என்பது கத்தியைக் கையாளுவதைப்போல் நிதானமாக செய்யவேண்டிய விசயம். இப்போதும் நண்பருடன் செல்லும் போது பணம் கொடுத்து விட்டு கேட்பதற்கு தயங்கியிருக்கிறேன். சில சமயம் முயன்று வினோதமான பார்வைகளையும் கண்டிருக்கிறேன். இதில் ஆசிரியரின் முடிவு “Back to Honesty movement”. அடுத்தவர் பணத்தை திருப்பித் தரும் முயற்சி. இதில் நேர்மை என்ற சொல்லை விட முயற்சியே பொருத்தமாக இருக்கும் என்றே எனக்குப் படுகிறது. கூடுமானவரை பெரும்பாலான மக்கள் யாரையும் ஏமாற்ற முயலுவதில்லை.ஆனால் வாங்கும் போது பெரிதாக இருக்கும் தேவை அதை பயன்படுத்தியவுடன் பட்சத்தில் எளிதாக மறந்து விடுகிறது. இது போன்ற சிறிய விசயங்களே பின்னர் ஏற்படும் கசப்பான நிகழ்வுகளுக்கு அடித்தளமாக அமைகின்றன. நண்பர்களுடன் வெளியில் செல்லும் பொழுதெல்லாம் இந்தக் கட்டுரை நினைவுகளில் மேலெழும்பி எனக்கு வழிகாட்டுகிறது.
என் தந்தை எங்களுக்குச் சொன்ன அறிவுரைகளை விட. அவரின் அடுத்தவர் சொத்து நெருப்புக்குச்சமம் என்ற வாழ்க்கை முறையே இன்று எங்களிடம் ஆழமாக பதிந்திருக்கிறது.
என் நெருங்கிய உறவினர் ஒருவரின் பண்பு என் அன்றாட வாழ்வில் ஒரு மற்றுமொரு படிப்பினையை நிறுத்தியது. நமக்கு உதவியாய் வேலை செய்யும் ஓட்டுனர்,பணிப்பெண் ,காவல்காரன், சலவைத் தொழிலாளி அவர்களின் தினக்கூலியை அப்பொழுதே அவர்களுக்குக் கொடுப்பது மிகவும் முக்கியமானது என்பது தான் அது. நமக்கு சிறியதாகத்தோன்றும் இருபது அல்லது ஐம்பது ரூபாய்கள் அவர்கள் தினத்தில் ஒரு நாள் உணவுக்கானது. மாதத்தின் முதல் தேதி அவர்களிடம் அவர்கள் உழைப்பின் கூலியைக் கொடுக்க தவறிய நாட்களில் எதோ தவறு செய்கிறாற்போல் என் மனது இடித்துரைக்கிறது.
பெரியோர்களின் அறிவுரை வழங்கும் சொற்களை விட அவர்கள் பின்பற்றும் தினசரி வாழ்க்கை முறைகளையே அடுத்த தலைமுறைகள் எளிதில் கிரகிக்கின்றன. அது நல்லவைகளானாலும் அல்லது கெட்டவைகளானாலும்.
செப்டம்பர் 8, 2008

மனதில் பதியும் ராகங்கள்

கர்னாடக சங்கீதத்தை பொறுத்த வரை எனக்கு தெரிந்த ஒன்றிரண்டு ராகங்களும் கேள்வி ஞானம் தான். விவரம் அறியாத வயசில் இருந்து எனக்கு குரு என் அப்பா தான். அவரும் இதை முறையாக கற்றிருக்கவில்லை. ஆனாலும் அவரால் அந்த சங்கீதத்தை உள்வாங்க முடிந்தது. முதன்முதலாக எனக்கு ராகம் என்ற சொல்லுக்கு மோகனம் என்று மட்டுமே அறிந்திருந்தேன். அதற்க்கப்புறம் ஹம்ச்த்வனி, காம்போதி இவை பரிச்சயமாயின.

நானாக தேடி கற்கும் ஆவலில் பல பாடல்களை பல்வேறு ராகங்களை கேட்க முற்பட்டாலும், சில ராகங்களைத் தவிர மற்றவற்றை மனதில் பதிய வைக்க சிரமமாக இருக்கிறது.ஆனால் சில ராகங்கள் மட்டும் முதல் சமயத்திலேயே மனதில் பாய் விரித்து அமர்ந்து கொள்கின்றன. புதுப்புது பாடல்களைக் முதன் முறையாக கேட்கும் போதும் என்னைக் கவர்ந்தவை பெரும்பாலும் மோகனம், ஹம்சத்வனி, காம்போதி, ஆபேரி, கர்னாடக தேவகாந்தாரி இந்த ராகங்களிலேயே அமைந்து விடுகின்றன.ஆபேரியும் கர்னாடக தேவகாந்தாரியும் ஒன்றா?

என்னால் ஒரு சில ராகங்களை மட்டுமே உணர முடிகிறது. இந்த ராகங்களுக்கு இடையே எதாவது தொடர்பு உண்டா?. ஒருவரின் இயல்புக்கு(nature) ஏற்பத்தான் ராக விருப்பங்களா?

Saturday, May 15, 2010

அல்கெமிஸ்டும்(Alchemist) அம்புலிமாமாவும்

இரண்டு நாளைக்கு முன் அல்கெமிஸ்ட் என்கிற புத்தகத்தை விழுந்து விழுந்து படித்து முடித்தேன். முடிவைப் படித்தபின் தான் இதை எங்கியோ படித்திருக்கிறோமே என்று நினைத்தேன். அட இது நம்ப அம்புலிமாமா கதையாச்சே. ஒரே ஒரு நிமிஷம் நம்ம அம்புலிமாமா-விலிருந்து தான் இவர் இந்த கதைய சுட்டுட்டாரோன்னு நினைச்சேன். அப்புறம் பார்த்தா இந்த புத்தகம் வந்தே ஒரு முப்பது வருசம் இருக்கும் போல இருக்கு. யாரோ ஒரு புண்ணியவான் இந்த இடையன் கதையை அம்புலிமாமாவுக்காக சுருக்கி போட்டுருக்கார்.

கதைச்சுருக்கம்: ஸ்பெயினில் இருக்கும் ஒரு இடையன் எகிப்துக்கு சென்றால் அவனுக்கு புதையல் கிடக்கும் என்று கனவு காண்கிறான். அதற்காக அவன் மேற்க்கொண்ட பயணம் தான் கதை. முடிவில் அவனுக்கு புதையல் கிடைத்ததா?.....தெரிந்து கொள்ள அல்கெமிஸ்ட்(Alchemist) படியுங்கள்.

இந்த புத்தகத்துக்கு உலகில் பல லட்சக்கணக்கான மக்களிடமிருந்து பாராட்டு கிடைத்திருக்கிறது. கதை என்னவோ ஒரு வரியில் சொல்லிவிடக்கூடியது தான். ஆனால் அதனிடையே ஆசிரியர் சொல்லியிருக்கும் கருத்துக்கள் படிப்பவருடைய வாழ்க்கையில் ஒருதடவையேனும் பொருத்திப் பார்க்க வைக்கிறது

இந்த கதைல எனக்கு ஒரு சந்தேகம். Desitiny ங்கற வார்த்தைக்கு வாழ்க்கையின் அர்த்தம் -ன்னு தான் பொருள்ன்னா, அந்த இடையன் அவன் புதையலை அடைந்தவுடன் அவன் வாழ்க்கையின் அர்த்தம் பூர்த்தியாகி விடுகிறதா?. இல்ல நான் புரிந்து கொண்டது தவறா?. நிதானமா இன்னொரு தடவை இதைப்படிக்க வேண்டும்.

Sunday, May 9, 2010

அன்னையர் தினம்-அப்பா பாட்டு

இந்த அன்னையர் தினத்தில் என் அப்பா தன் தாயார்(முத்துமீனாட்சி) நினைவாக தானே இயற்றிய ஒரு பாட்டு.

ராகம் : நாட்டை

                    பல்லவி
முத்து மீனாட்சியே - தாயே
முத்தமிழாலே இப்புவி ஆண்ட  (முத்து)
                 
                  அனுபல்லவி
சக்தியே இளம் பிறைதனைச் சூடிடும்
பித்தனில் பாதியே என்றனின் தாயே  (முத்து)

                    சரணம்
பாண்டிய மன்னரின் பைந்தமிழ் கொடியே
பார்வதியே சிவக்களிறதன் பிடியே
வேண்டிய அன்பன் என் உளம்தனில் குடியே
கொண்டு நீ என்றனை வாழ்த்திடுவாயே   (முத்து)

சிலம்பில் ஒரு விடுகதை

எங்க அப்பா ஒரு தமிழ் ஆசிரியர். அவர் எனக்கு சொல்லிக்கொடுத்த ஒரு விடுகதை.

ஒரடியில் ஈரடி காணும் அளவடியான 
ஒரு சிலம்படி கூறு.

யோசிங்க.

ஒரு clue: இது மாதவி கோவலனிடம் சொன்னது
(CLUE ங்கறதுக்குச் சரியான தமிழ்ச்சொல் என்ன?)

Monday, May 3, 2010

அடையாளம்

நாய் பட்டி, சங்கிலி
இன்னபிற சொற்களால்
கேலிபேசப்பட்ட அட்டையைக்
கழற்றியவுடன் தான்
நான் உணர்கிறேன் ஒரு
முகமில்லாதவளாக...

Saturday, May 1, 2010

உரையாடல்

பேசுவதற்கான வார்த்தைகள்
தீர்ந்துவிட்டிருந்தன அதற்குள் ...
மெளனம் நிறைகிறது
காலியான வங்கிக்கணக்கில்