Friday, April 30, 2010

என் முதல் சம்பாத்தியம்.-2

கடலை உடச்சு 40 காசு வாங்கின உற்சாகத்துல, வீட்டுக்காரம்மா தோட்டத்துக்கு, வெங்காயம் தாள் அறுக்க போனது வேற கதை. ஒரு பெரிய சாடு நிறைய சின்ன வெங்காயம் தாள் அறுத்துக்குடுத்தா 2 படி வெங்காயம் குடுப்பாங்க. எங்க அம்மா வீட்டுல வேலை செஞ்சுட்டு தாள் அறுக்க கிளம்பிடுவாங்க. லீவ் நாளுன்னா நானும் கூடப்போய் கொஞ்சம் தாள் நறுக்கி குடுத்துட்டு வருவேன் . சின்ன பிள்ளைகளால ஒரு நடுத்தரமான கூடை தான் அறுக்க முடியும். சாடு ரொப்பறதுக்கு அதே மாதிரி 3,4 கூடை அளவாகும். சின்ன புள்ளைக சாடுக்குள்ள போய் ஒளிஞ்சுகிட்டு விளையாடலாம். அத்தனை பெருசு.

எங்க வீட்டுகாரங்க வீடு எப்படீன்னா, இது மாதிரி நெல்லு, வெங்காயம்னு கொட்டி சேமிச்சு வச்சுக்கற மாதிரி பெரிய வராண்டா,திண்ணை,வாசல்ன்னு அமர்க்களமா இருக்கும். மத்தியானமெல்லாம் எல்லா பொம்பளைகளும் ஒரே எடத்துல சேர்ந்தாங்கன்னா கேக்கணுமா. ஒரே கலக்கலா இருக்கும் போங்க. வெத்தல பாக்கு போடறது, பாதி இல்லைன்னா ஒரு வெத்தல அடுத்தவங்ககிட்ட கேட்டு வாங்கறது, யாராரு வீட்டுல என்னென்னனு நாயம் அடிக்கறதுன்னு ஒரே பிஸியா இருக்கும். ஆனா கைபாட்டுக்கு தாள் அரிஞ்சிட்டு இருக்கும். வெங்காயம், தாளு, ஈர மண்வாசம், பெருசுங்க போடற வெத்தலை பாக்கு ன்னு அந்த எடமே ஒரு கலவையான வாசம் அடிக்கும். நான் அதுக்கும் எங்க வீட்டுக்குமா ஒரு ரவுண்டு அடிச்சுக்கிட்டே இருபேன். நான் வெங்காயம் தாள் அரிச்சு சம்பாதிச்சதெல்லாம், எங்க வீடு இட்லிக்கு, வெங்காய சாம்பார் செஞ்சே காலியாப்போச்சு. ஆனா மனசுல அந்த வாசம் அப்படியே இருக்கு.

காலேஜ் முடிச்சு வேலைக்கு வந்தப்பறம் முதல் மாச சம்பளமா 1500 ரூ செக்கா வாங்கினேன். அக்கா வீட்டுல இருந்து வேலைக்கு போயிட்டு இருந்ததால செலவு ஒன்னுமில்ல. அதை அப்படியே பேங்குல போட்டுட்டேன். என் முதல் மாச சம்பளம் இன்னும் செலவாகலை.

Thursday, April 29, 2010

என் முதல் சம்பாத்தியம்.-1

நான் ஐஞ்சாவதோ ஆறாவதோ படிக்கும் போது எங்க வீட்டுக்கு பக்கத்துல கடலை விதைக்கறதுக்காக விதைக்கடலய தோல் உடைக்கறத்துக்கு காசு குடுப்பாங்க. ஒரு வள்ளத்துக்கு(4 படி) நாப்பது காசு. நானும் கொஞ்ச நாள் பக்கத்து வீட்டு அக்காங்களோட போய் அவங்களுக்கு உடச்சு குடுக்கற சாக்குல கொஞ்சம் வாயில போட்டுட்டும் வருவேன். அவங்களும் நல்லா பிளான் செஞ்சு நம்மளையும் அவங்களுக்காக உடைக்க வச்சுருவாங்க. பெரியவங்க எல்லம் டக டகன்னு உடச்சுருவாங்க. எனக்கு தான் பொன்னான கைகளாச்சே. (வீட்டுல செல்ல கடகுட்டி பொண்ணாக்கும் நானு). தரைல டொக்குன்னு தட்டி ரெண்டா பிக்க வராது.  கோணமாணலாத்தான் வரும். அதுவும் கொஞ்சம் உடைக்கறதுக்குள்ள கை வலிக்க ஆரம்பிச்சுடும். விட்டுட்டு போயிருவேன். ரதின்னு ஒரு அக்கா ரெண்ணு கைல, வாயில கடிச்சுன்னு என்ன வேகமா ஒடைப்பாங்க. இப்படியே சூப்பர் பாஸ்டா ஒடைச்சு ஒரு நாளைக்கு 2 ரூவா வரைக்கும் வாங்கீட்டு நடைய கட்டுவாங்க. அப்புறம் தான்  மர மண்டைக்கு தோணுச்சு. ஏன் நாமளே தனிய உடைக்க கூடாதுன்னு. முதல்ல ஒரு வள்ளம் வாங்கி பாதி உடைச்சேன். அப்புறம் அதை விட்டுட்டு அடுத்த நாள் போய்ப் பார்த்தா நான் வரமாட்டேன்னு வேற ஒருத்தருக்கு கொடுத்து அவங்க முடிச்சு காச வாங்கீட்டு போய்ட்டாங்க. திருப்பியும் ஒரு வள்ளம் வாங்கி மணிக்கணக்கா உக்கார்ந்து உடச்சுட்டு முழுசா நாப்பது காசு வாங்கீட்டேன்ல நானு :). ரதியக்கா தான் என்ன வேலை செய்ய தூண்டுன புண்ணியவதியோன்னு இப்பொ தோணுது. :)

அப்புறம் ரெண்டாந்தடவை 2 படியோ என்னமோ உடைச்சு திரும்பியும் காசு வாங்கினதா நினைவு.இப்படி செய்யறேன்னு வீடுல சொல்லல. கைல மொத சம்பளம்(?) வாங்கினப்பறம் ஒரே ஓட்டம் தான் வீட்டுக்கு. அப்பாகிட்ட நானே சம்பாதிச்சதுன்னு ரொம்ம்ப பெருமையா நீட்னேன். அப்பா என்ன சொன்னாரோ எனக்கு எல்லாம் நெனைப்பில்ல.ஆனா அந்த காசை செலவு பண்ணக்கூடாது வீட்டுக்கு  ரக்ஷைன்னு சொல்லி உடனே மஞ்சள் துணில முடிஞ்சு சாமி பக்கத்துல வச்சு பீரோல வச்சுட்டார்.
அது இன்னமும் எங்க அம்மா கல்யாணத்துக்கு பரிசா வந்த சோப்பு பவுடர் வச்சுக்கற டப்பாவுல, தாத்தாவோட கிரிமென்ஸ் கோட் பட்டன், பாட்டி கைல கடைசியா குடுத்து வாங்கின காசு, வரலக்ஷ்மி பூஜை பிரசாதம் மற்றும் பல பொக்கிஷங்களுக்கு இடைல பத்திரமா இருக்கு.

Wednesday, April 28, 2010

அப்புறம் பார்க்கலாம்

ஆரம்பிக்கும் உற்சாகம்
அரை நொடியில் காணோம்.
இன்னொரு வரவு
முடிவில்லா பட்டியலில்.

பார்வைகள் புதிது

நாம புதுசா பொறந்த குழந்தைய பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போனா என்ன செய்வோம்?. பாப்பா அம்மா மாதிரி இருக்கு, அப்பா மாதிரி இருக்குன்னு ஆளாளுக்கு ஒன்னு சொல்லுவோம். கொஞ்சம் பெரியவங்களா இருந்தா ஒடனே காது மடலைப் பார்த்துட்டு பையன் கொஞ்சம் மாநெறமாத்தான் வருவான் அப்படீம்பாங்க!!!

ஆனா ஒரு அக்கா (2 1/2 வயது) தன் தம்பிய பார்த்துட்டு எப்டி வர்ணிக்கறா பாருங்க...
  • தம்பி சூப்பரா இருக்கான்.
  • குட்டியூண்டு கை நன்னாருக்கு
  • முடி நன்னாருக்கு
  • கொஞ்சூண்டு முடி இருக்கு
அவளுக்கு குட்டிபாப்பா பொக்கைவாயா இருக்கறதுதான் பிடிச்சிருக்காம்.

பொக்கை நன்னாருக்கு.பல்லு வேண்டாம் அப்படீங்கறா :)

அவன் டையப்பர் கட்டாத போது பார்த்துட்டு, இதென்ன இப்பிடி இருக்குன்னு கடைசீயா ஒரு கேள்வி வேற கேட்டா. :-) (எல்லாத்தையும் கேள்வி கேட்டு பழகணும்ன்னு அவிங்க அப்பா சொல்லி குடுத்திருக்காராம்)

அவளுக்கு எல்லாமே ஆச்சரியமா இருக்கு....

அவளுக்காகவே ஒரு கவித...

ஒரு பட்டாணியே
பொட்டுக்கடலையை பார்த்து
வியக்கிறதே (ஆச்சர்யக்குறி) !!!

பின்குறிப்பு: சரி சரி.....கவிதையின்னு தெரியாம சொல்லீட்டம்பா... மன்னிச்சுக்கங்க....பட்டாணியும், பொட்டுக்கடலையும் நான் அவங்களுக்கு வச்சுருக்கற செல்லபேர்...

Tuesday, April 6, 2010

புரத ஒழுக்கு நோய் | Nephrotic Syndrome

வணக்கம்.

சில வருடங்களாகவே எல்லா தமிழ் வலைப் பூக்களை தேடித் தேடி படிச்சிகிட்டு இருந்தாலும், சொந்தமா ஒரு பக்கம் ஆரம்பிக்க தயக்கமாவே இருந்தது. வலையுலகுல நீ, நான் ன்னு எல்லாரும் வரிஞ்சு வரிஞ்சு சுவாரஸ்யங்களான விஷயங்களா எழுதும்போது, நான் என்னாத்தன்ன எழுதறது? ஆனது ஆகட்டும்-னு தில்லா இன்னிக்கு நானும் ஆரம்பிச்சுட்டேன். முதல் இடுகை யாருக்காவது பயனுள்ளதாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி.

புரத ஒழுக்கு நோய் | Nephrotic Syndrome

கைகுழந்தைகளுக்கு காய்ச்சல், சளின்னாலே புது பெற்றோருக்கு பயம் வந்திடும். டாக்டர் குடுக்கற அட்வைஸுக்கு மேல பக்கத்துல, சுத்தி, அப்புறம் வீட்டுல இருக்கற பெரியவங்கன்னு எல்லாரும் மாத்தி மாத்தி வைத்தியம் சொல்லி நம்மளுக்கு பைத்தியம் பிடிக்க வச்சுருவாங்க.

நெப்ரோடிக் சிண்ட்ரோம் அதாவது புரத ஒழுக்கு நோய், அதிக அளவில் பரவலாக அறியப்படாத ஆனால் பெரும்பாலான குழந்தைகளை பாதிக்கும் நோயாகும்.

ஒண்ணரை வயதுல இருந்து 5 வயது வரையான குழந்தைகள் இதுனால பாதிக்கப்படறாங்க. இது ஒரு சிறுநீரகம் தொடர்புடைய நோய்.

அறிகுறிகள்

கீழ்க்கண்ட அறிகுறிகள், குழந்தைகளிடம் தென்பட்டால் உடனே குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரிடம் செல்லுங்கள்:

  • தூங்கி எழும் போது கண் இரப்பைகள் வீங்கி காணப்படும். பகலில் கண்ணைச் சுற்றி உள்ள வீக்கம் படிப்படியாக வடிந்து உடம்பில் அல்லது காலில் வீக்கம் (edema) காணப்படும்.
  • கவனிக்கும் படியாக குழந்தைகளின் எடை அதிகரிக்கும்.
  • மிக சிறிய அளவில் சிறுநீர் வெளியேறுதல் (less frequent urination) / சிறுநீர் மஞ்சளாக அடர்த்தியாக வருதல்/சிறுநீர் வெளியேறாமை.
  • காய்ச்சலுடன் இந்த அறிகுறிகள் தென்பட்டால் இதன் தீவிரம் அதிகமாகும்.
குழந்தைகளுக்கு வரும் நெப்ரோடிக் சிண்ட்ரோம்-க்கு சிகிச்சை முறைகள் பெரியவர்களுக்கு தரும் முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இதற்கு சிகிச்சை வாரங்களில் இருந்து வருடங்கள் வரை மருந்து சாப்பிடும் அவசியம் நேரலாம். தேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் உடனே நெப்ரோடிக் சிண்ட்ரோம் அறிகுறிகளை கண்டுபிடித்து விடுவார்.

குழந்தைகளுக்கு எப்பொழுதாவது கண்களில் அல்லது எந்தப் பகுதிலாவது வேறுபாடான வீக்கம் தென்பட்டால், "குழந்தை தூங்கி எழுந்தா இப்படி தான் வீங்கும்" அல்லது "உடம்பு சூடு" போன்ற இலவச அறிவுரைகளிலிருந்து பிய்த்துக் கொண்டு pediatrician-னிடம் ஓடுங்கள். இந்தியாவில் மிகக்குறைந்த அளவிலேயே Pediatric Nephrology-ல் சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர்.

ஒருமுறை கண்டறியப்பட்டு சிகிச்சையில் இருந்தாலும் கூட, மறுபடி பலமுறை இது திரும்பி வருவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உண்டு (relapse). அதனால் வீட்டிலேயே கண்டறியக்கூடிய Protein Sticks-ஐக் கொண்டு வாரம் இருமுறையாவது சிறுநீர் பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும்.