Thursday, June 7, 2012

ஒரு குடும்பம் ஒன்று சேர்கிறது

[பத்து வருடங்களுக்கு முன்னால்]

அக்கா!!! ....சுப்பக்கா.....

வாடா சந்தா! பிரயாணம் எல்லாம் கஷ்டமா இல்லயே...செளரியமா இருந்துதா..

கஷ்டமா இல்லக்கா....நானும் உன்ன எப்போ பார்ப்பேன்னுதான் இருந்தேன்......உன்னப் பார்த்து ரொம்ப வருசமாயுடுத்தே அக்கா.
உன்ன பார்க்காம ,பேசாம எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது அக்கா....இங்கெ லெட்டர் கூட போட முடியாது. என்ன "சந்தா"ன்னு வாய் நெறய கூப்பிட அங்கே யார் இருக்கா எனக்கு.

எனக்கும் உன்னப்பத்தியேதான் நினைப்பெல்லாம். அக்கா அக்கான்னு காலைச்சுத்திண்டே தானே இருப்பே. நான் இங்கே இருந்தாலும் மனசெல்லாம் அங்க தான் இருந்தது. உன்கூட இருந்தால் என்னென்னவோ ஸ்லோகம் எல்லாம் கேட்டு தெரிஞ்சுண்டு நாம ரெண்டு பேரும் சொல்லிண்டு இருக்கலாம். உன்னப்பார்த்தாலே தெம்பா இருக்கு சந்துரு. பார்வதி குழந்தைகள் எல்லாம் எப்படி இருக்கா?. எல்லார்கிட்டயும் என் ஆசீர்வாதங்களை சொன்னியா.

[இடையில் யாரோ]

டேய் சந்துரு ....இது எங்க சுப்பக்காடா...
சந்துரு: சொல்லுவே சொல்லுவே.....எங்க சுப்பக்கா......
சுப்பு: என்னடா ...சின்ன வயசுலதான் அவன அழ விட்டேள்ன்னா..இப்பவும் இப்படி சொல்லறயே...நான் என்னிக்கு அவன் சுப்பக்கா தான். அவனும் என் சந்தா தான்.

நீ என் பக்கத்திலே இருந்தா ஒரு கவலையும் இல்லெ எனக்கு. அன்னிக்கு ரொம்ப மனசு ஒடைஞ்சு போய்ட்டியே. எனக்கு ரொம்ப பயம்மா இருந்துது.என் கூடவே வந்துடுவியோன்னு. இன்னும் பொறுப்பு இருக்கேடா உனக்கு.

இல்லக்கா.... இப்பொ எல்லாப் பொறுப்பையும் கீதா ராஜாட்ட ஒப்படைச்சுட்டேன். இனி அது அவா கவலை. எனக்கு இனிமே தெம்பு இல்லை அக்கா.  மனசாட்சிக்கு விரோதமில்லாம இருந்தேன்னு திருப்தியா இருக்கு. ஒருத்தருக்கும் அது செய்யலை, இது செய்யலைன்னு எனக்கு உறுத்தல் இல்லை. என்னால முடிஞ்ச வரைக்கும் செஞ்சிருக்கேன். "I lived my life"

சரி வா..அத்திம்பேர் அங்க இருக்கார் பார். அப்புறம் நாம ரெண்டு பேரும் லலிதா சஹஸ்ரநாமம் சொல்லலாம். நான் சரியா சொல்றேனான்னு பார்.

......

இங்கே புகைப்படத்தில் அக்கா தம்பி  சுப்புலக்ஷ்மியும்-சந்திரசேகரனும்  சிரித்துக்கொண்டு இருக்கின்றனர்.
            
                            

[பத்து நாட்களுக்கு முன்னர்]

"சந்தா அங்கே பார் சுப்பையாவும் வந்துட்டான் பார்."

"சுப்புக்கா"....சந்துருண்ணா.......

கடைசில நானும் வந்துட்டேன்..... திப்பியும் எனக்கு முன்னாடியே வந்துட்டாளே.....எனன மட்டும் தனியா விட்டுட்டேளே..

"திப்பி" "கிட்டுண்ணா" "சங்கரண்ணா" "குப்புக்கா" "மீனுக்கா"

எல்லரையும் பார்த்து ரொம்ம்ம்ப வருஷமாச்ச்சே....

கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு அப்புறம் சகோதர சகோதரியர் அனைவரும் சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது....

அறையில் "அண்ணா" "அக்கா" "சங்கரசுப்பா" "கிட்டு" "சுப்பு" "சந்துரு" "திப்பி" "குப்பு" "மீனு" "சுப்பையா" என்று பாசமாக அழைக்கும் குரல்களே நிரம்பியிருக்கின்றன.

[இன்று]

சரி சரி...கமலண்ணாவும் முத்துமன்னியும் நம்ப எல்லாரையும் சேர்ந்து பார்க்கணும்னு ரொம்ப காலமா தவம் கெடந்துண்டு இருக்கா....எனக்கும் நம்ம அம்மா அப்பாவை எல்லாரும் சேந்து பார்க்கணும்னு மனசு அடுச்சுக்கறது...வாங்கோ போலாம்....

[அனைவரும் ஒரே குரலில்]....................."முத்துமன்னி-கமலண்ணா"

வாங்கோ குழந்தைகளா.....
இப்போ எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு...உங்கள்ள சில பேர் சின்ன வயசு முகம் தான் எங்களுக்கு நெனைவிருக்கு. சீக்கிரமாவே பிரிஞ்சிட்டோம் இல்லயா..... இப்போ எல்லாரும் சேர்ந்து அங்க இருக்கற எல்லா கொழந்தைகளுக்கும் ஆசீர்வாதம் பண்ணுவோம். எல்லாரும் மனசு நிறைஞ்சு சந்தோசமா இருந்துட்டு காலம் வரும் போது நம்ம கிட்ட வரட்டும்.

தீர்க்காயுஷ்மான் பவ!! தீர்க்க சுமங்கலி பவ!! சுப்ரமண்யம் !!! ஜெகதீசா!!!

கமலாசனம்-முத்துமீனாஷி [குப்புலஷ்மி,சங்கரசுப்பன்,சுப்புலக்ஷ்மி,கிருஷ்ணமூர்த்தி,சந்திரசேகரன்,
கல்யாணராமன்,திரிபுரசுந்தரி]  அவர்களின் நினைவாக....

மே 28,2012 அன்று எங்களின் சித்தப்பா திரு. கல்யாண ராமன்(சுப்பையா) அவர் பெற்றோர், சகோதர,சகோதரிகளுடன் இணைந்தார்.






No comments:

Post a Comment