முன்குறிப்பு :
'உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதன் முறையாக" என்று வர்ணிக்கப்பட வேண்டிய அளவில், வரலாற்றிலேயே முதன் முறையாக நான் பார்த்த முதல் புத்தகக் கண்காட்சி (சென்னை 2013) , என் உடல் பொருள், ஆவி இன்னும் பிற எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு போய்விட்டதனால், இருக்கும் சமுத்திர தண்ணீரையெல்லாம் ஒரு அரை லிட்டர் பெப்ஸி பாட்டிலில் அடைப்பது போல ஒரே நாளில் சுமார் 800 கடைகளைச் சுற்றிப் பார்த்த ஆவேச வெள்ளத்தில் ஒரு பெட்டி, ஒரு பெரிய கட்டைப்பை நிறைய புத்தகங்களுடன் ஹைதராபாத் வந்து சேர்ந்தேன்.
--------------
மார்கழி ஆரம்பிப்பதற்குள்ளாகவே அடுத்த புத்தகக் கண்காட்சி ஜுரம் என்னைத் தொற்றிக் கொண்டு விட்டது. சரியாக டிசம்பர் 15 அன்றே மனம் பித்துப் பிடித்த குரங்காக, இணயத்தில் புத்தகப் பரிந்துரை பட்டியல்களுக்காகவும் வேறு புத்தக விபரங்களுக்காகவும் தாவ ஆரம்பித்தது. முன் அனுபவம் கை கொடுக்கும் என்று சும்மாவா சொல்லினார்கள். போன முறை கிடைத்த பளு தூக்கும் சோதனைக்குப் பிறகு, வாங்க வேண்டிய புத்தகங்களைத் தீர்மானிக்கும் முன்பே எடுத்து செல்ல வேண்டிய ட்ராலி பெட்டியைச் சுத்தம் செய்து வைத்து விட்டேன். புத்தகக் கண்காட்சிக்கு பெட்டியக் கொண்டு போய் புத்தகம் வாங்கின ஆள் நானாகத்தான் இருக்கும். :). திரும்பி வரும் போது வரும்போது ஒருவர் 'இங்க பாரு, பொட்டியெல்லாம் கொண்டு வந்திருக்காங்க" என்று சொல்ல, மனதில் ஒரு அல்ப சந்தோஷம் எட்டிப் பார்த்து 'ஏய் பூர்ணி...எப்டில்லாம் யோசிச்சிருக்க பாரு ...எங்கியோஓஓஓஓஒன் போய்ட்டெ' என்று சொல்லிவிட்டுப் போனது.
நுழைவுச்சீட்டு வாங்க போவதற்குள்ளாகவே திருஷ்டிப் பரிகாரமாக முதலில் கம்பளம் தடுக்கி விழுந்து மெல்ல எழுந்திருத்து வாசலில் குடுத்த தம்மாத்தூண்டு பொங்கலை ஒரே வாயில் போட்டு விட்டு விடு ஜூட் உள்ளே. முதலில் ஓடி கர்ச்சீப் போட்ட லயன் காமிக்ஸ் கடையில், இருக்கும் புத்தகங்களை பில் போடும் போது இன்னும் சில புத்தகங்கள் தீர்ந்து போச்சு என்று கடைக்காரர் பொறாமைத்தீயை பத்த வைத்து விட்டார். அம்மாடி லக்கி புத்தகங்கள் எல்லாம் கிடைத்ததே என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பொட்டி, பட்டியல் சகிதம் ஆட்டம் சூடு பிடித்தது.
ஒரு மாதமாக தயாரித்துக் கொண்டு போன பட்டியலின் திருத்திய சுருக்கிய எண்ணிக்கைக்கும் மேலாகவே புத்தகங்களை வாங்கினேன். ( ஹூம். என்னிக்கெல்லாம் பட்டியல்ல இருக்கற பொருள் மட்டும் வாங்கியிருக்கோம் இப்போ மட்டும் திருந்த :-). ) கையில் கேமிராவும் கொண்டு போயிருந்ததால் சகட்டு மேனிக்கு கிளிக்கியும் தள்ளியாயிற்று.
பனுவல்-ல் ஹருகி முரகாமி பெயர் கண்ணில் பட்டு ஆர்வமாக உள்ளே நுழைந்து எடுத்த போது கடையிலிருந்த ஒருவர் என் கையிலிருந்த பட்டியலைப் ஒரு தரம் பார்த்துவிட்டு, எங்கோ ஓரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த "லங்காபுரி ராஜா" வை என்னிடம் நீட்டி மேடம் இதுவும் பிரமிளோடது தான். நீங்க தேடற 'கைப்பிடியளவு கடல்' ரதி எங்கியுமே இல்ல. பாருங்க இவங்களே யாராவது அந்த புத்தகத்தை வச்சு இருந்தா மறு பதிப்பு செய்ய குடுங்க னு போட்டு இருக்காங்க என்று முடித்தார். ஹை... வாலு போச்சு கத்தி வந்தது கணக்கா லங்காபுரி ராஜா பெட்டில விழுந்துட்டார். வீட்டுக்கு வந்து புத்தகத்தோட பதிப்பு ஆண்டு பார்த்த போது விலை 15க்கு பேனாவுல எண் 1 ஐ 4 ஆக மாற்றி இருந்தது தெரிந்தது. சரீ பில் போடும் பொழுதெல்லாம் இப்படி நடந்திருக்காது என்று நானும் ஒருவழியா சமாதானம் ஆகி விட்டேன். அங்கேயே ஜெயமோகனின் 'இன்றைய காந்தி" கேட்டபோது தமிழினியில் கிடைக்கும் என்றார்கள்.
இங்கேயும் ஒரு பதிவு படிச்சா இன்னொரு பதிவு இலவசம்..... :)
சென்னை புத்தகக் கண்காட்சி அனுபவம் - 2.....தொடரும்.....
சென்னை புத்தகக் கண்காட்சி அனுபவம் - 2.....தொடரும்.....
No comments:
Post a Comment