Tuesday, January 21, 2014

2014 சென்னை புத்தகக் கண்காட்சி அனுபவம் - 2


வம்சி புக்ஸ் கடையில் "வெண்கடல்" "மூன்றாம் பிறை" "கதை நேரம் (குறுந்தகடு)  மூன்றும் உடனடியாகக் கிடைத்தன. பணம் செலுத்துமிடத்தில் அமர்ந்திருந்த பெண்மணி அவர்களைப் பார்த்து மையமாக சிரித்துவிட்டு அவர்களை எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே என்று வெளியே வரும்வரை யோசித்துக் கொண்டே வந்தேன். வீட்டிற்கு வந்து மூன்றாம் பிறை புத்தகத்தைப் புரட்டிய போது அவர்களே (K.V. ஷைலஜா) பின்னட்டையில் இருந்தார்கள். கொஞ்சம் முன்பே பார்த்திருந்தால் அவர்களிடம் சில வார்த்தைகளாவது பேசிவிட்டு புத்தகத்தில் கையெழுத்து வாங்கி இருக்கலாம். ஒரு எழுத்தாளரிடம் முதன் முறையாக அளவளாவும் சந்தர்ப்பத்தை விட்டாயிற்று. :(

விடியல் பதிப்பகத்திற்கு அவரசரமாக ஓடி ஈரான் 1 & 2 (Persepolis)  பிரதிகள் இருக்கிறதா என்று கேட்டதற்கு நிறைய இருக்கிறது என்று எடுத்து கொடுத்தார்கள். நான் அவர்களிடம் , போனவருடம் இந்த புத்தகத்தைக் கேட்ட பொழுது கொண்டு வந்த பிரதிகள் காலியாகி விட்டது என்று சொன்னதினால் கொஞ்சம் சந்தேகத்துடனே வந்தேன் என்று சொன்னேன். கடையிலிருந்த சிப்பந்தி கிடங்கில் நிறைய இருப்பதாகவும் யாரும் அதிகம் வாங்குவதில்லை என்றும் சொன்னார். புத்தகப் பதிப்பு பிரமாதென்பதும், ஈரான் என்கிற தலைப்பே மக்கள் ஆர்வம் காட்டாதற்கு காரணமா இருக்கலாமென்பதும் ரகுவின் அபிப்பிராயம். இது இப்படி இருக்கும் போது, வாங்குகின்ற சில வாசகர்களிடமும் பதிப்பு விலை ரூ70க்கு பதிலாக ரூ 100 என்று ஒட்டி விற்பது நியாயமா?
ஆனால் சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் வானதி பதிப்பகத்தில் வாங்கிய வாண்டுமாமா,விசாகன் போன்றவர்களின் புத்தகங்கள் பதிப்பிக்கபட்டு இருந்த போது போட்ட விலையிலேயெ கிடைத்தன(முதற்பதிப்பு). வாழ்க வானதி.

உயிர்மையில் வாங்க நினைத்திருந்த "ஆது அந்தக் காலம்" "புரூஸ்லீ- சண்டையிடாத வீரன்" இரண்டு புத்தகங்களும்  பணப்பை இளைத்ததாலும், கைப்பெட்டி கனத்ததாலும் அடுத்த வருடத்திற்கு ஒத்திப் போடப்பட்டுள்ளன.

கால் களைத்துப் போய் பசி வயிற்றைப் பிடுங்கியதால் சாகித்ய அகெடமி மற்றும் சில பதிப்பகங்களைப் பார்க்காமலே கிளம்ப வேண்டியதாயிற்று. திரும்பி வரும் போது,எனக்காகவே புத்தகக் கண்காட்சிக்கு கூட வந்த அக்கா கணவரும் , பதிவுலகத்தில் பிரபலமான லிச்சி ஜூஸ் குடித்து விட்டு நடையைக் கட்டினோம்.


சென்னையில் ஆட்டோவில் செல்ல, இல்லாத சொத்தையும் எழுதிக்குடுத்துவிடக் கேட்கும்  ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மத்தியில் நந்தனம் கண்காட்சியிலிருந்து நங்கநல்லூர் வரை மீட்ட்ர் போட்டு மேலே பத்து ரூபாயைக் கூட சின்னக் குரலில் தயக்கத்துடனே கேட்ட ஒரு ஆட்டோ ஓட்டுனர் எங்களுக்கு அதிர்ஷ்ட வசமாகக் கிடைத்தார்.  ஒரு நினைவுக்கு அவரையும் ஆட்டோவையும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.
 
பின்குறிப்பு:
எதோ ஒருநாள் சம்பவத்தை கோர்வையாக எழுத நினைத்து பேனாவை எடுப்பதற்குள்ளாகவே கண்கள் இருட்டிக் கொண்டு வந்து மண்டை சூடாகி தலை வலி வந்து விட்டது. தட்டு தடுமாறி  ஒருவழியாக எழுதி முடிப்பதற்குள்ளாகவே தாங்கமுடியாத பிரசவ வேதனை என்பார்களே அது போன்ற அவஸ்தை பட்டாயிற்று. ஜெயமோகன் தினமும் ஒரு பகுதியாக தொடந்து 10 ஆண்டுகள் மகாபாரதம் எழுதுகிறாரே. அவர் காலில்விழுந்து கும்பிட வேண்டும் இருக்கிறது. அவர் வேகம் ஒரு அசுர வேகம்.
அவரின் வெண்கடல் முதல் கட்டுரையை பாதி படித்து விட்டு நிறுத்தி விட்டேன். இது வரை படித்ததிலேயே அமிழ்ந்து போய் கிடக்க வேண்டும் போல் தோன்றுகிறது. 

இந்த வருடம் படிக்க ஆரம்பித்த சில புத்தகங்களினாலேயே என் வேக வாசிப்பு மாறி விட்டது. கதையை தேடி ஓடிய என் மனத்தை "வெண்கடல்" ஆழ் அனுபவங்களைச் சுவைக்க இழுக்கிறது.


No comments:

Post a Comment